×

வளர்ந்து வரும் மகளிர் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை 34 ரன்னில் சுருட்டி இந்தியா அபார வெற்றி: 5 விக்கெட் எடுத்து ஷ்ரேயங்கா பாட்டீல் அசத்தல்

ஹாங்காங்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, நேபாள் ஏ மற்றும் ஹாங்காங் அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம் ஏ, இலங்கை ஏ, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மலேசியா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-ஹாங்காய் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஹாங்காங் அணியில் மரிகோ ஹில் மட்டும் அதிகபட்சமாக 14 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹாங்காங் அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் 3 ஓவர் வீசி ஒரு மெய்டன் உள்பட 2 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

மன்னத் காஷ்யப், பார்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டைட்டஸ் சது ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் 35 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷ்வேதா ஷெஹ்ராவத் 2 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து வந்த உமா சேத்ரி மற்றும் கோங்கடி த்ரிஷா இருவரும் இணைந்து 35 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிதாலிராஜ் பாராட்டு: இந்த வெற்றி குறித்து இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் தனது டுவிட்டரில், “வளர்ந்து வரும் இந்திய மகளிர் அணி இப்போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி ஹாங்காங்கை வெறும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். ஸ்ரேயங்கா பாட்டீல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மன்னத் காஷ்யப், பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது ஆகியோரும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி வேகத்தை தொடர்ந்து உருவாக்குங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post வளர்ந்து வரும் மகளிர் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை 34 ரன்னில் சுருட்டி இந்தியா அபார வெற்றி: 5 விக்கெட் எடுத்து ஷ்ரேயங்கா பாட்டீல் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Rising Women's Asia Cup Cricket ,India ,Hong Kong ,Shreyanka Patil ,Asia Cup 2023 Cricket ,Asian Cricket Council ,Women's Asia Cup Cricket ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...